முகப்பு
திருப்பூர்

சோமனூர் பேருந்து நிலைய விபத்து: முதல்வரிடம் ஊர் மக்கள் கோரிக்கை மனு

சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும்

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு மருத்துவச் செலவையும் அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியும் ஊர் பொதுமக்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
கோவையில் ரூ.195 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத் திட்டத்தில் நிறைவு பெற்ற பகுதியைத் திறந்து வைப்பதற்காக சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்றபோது முதல்வர் எடிப்பாடி பழனிசாமிக்கு சாமளாபுரம் அருகே அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
அப்போது, முதல்வரிடம் சோமனூர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.  இழப்பீட்டுத் தொகையை  ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கான முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்க வேண்டும். கை, கால் இழப்பு ஏற்பட்டவர்களுக்கு சேமிப்புக் கணக்கில் வைப்புத் தொகை வைத்து, அரசுப் பணி வழங்க வேண்டும்.  
இந்தச் சம்பவத்துக்குக் காரணமான அரசு அலுவலர்கள், அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும்,  குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். அரசு வேலைகளை செய்யும் தரமற்ற ஒப்பந்ததாரர்களை நீக்க வேண்டும்.  அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், பணி நடைபெறும் இடத்தில் அதன் முழு விவரங்களை அறிவிப்பாக வைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தரமான ஒப்பந்ததாரர்களுக்கே கட்டட ஒப்பந்தங்கள் வழங்கப்பட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →