காங்கயம் அருகே சிவன்மலை வனப் பகுதியில் துளிகள் அமைப்பின் சார்பில் முதற்கட்டமாக 800 மரக்கன்றுகள் நடப்பட்டன.
காங்கயத்தில் செயல்பட்டு வரும் துளிகள் அமைப்பினர் காங்கயம் நகரத்தில் தொடர்ந்து மரங்களை நட்டு வைத்து பராமரித்து வருகின்றனர். நகராட்சிக்கு உள்பட்ட அகஸ்திலிங்கம்பாளைத்தில் இருந்து களிமேடு சாலை, அண்ணா நகர், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் 200 மரக்கன்றுகள் நட்டனர்.
இந்நிலையில், சிவன்மலை வனப் பகுதியில் முதற்கட்டமாக வேம்பு, புங்கன், மகாகனி, மகிழம், அரசு உள்ளிட்ட மரக் கன்றுகளை நட்டு வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காங்கயம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் என்.எஸ்.ராஜ்குமார் மன்றாடியார் கலந்துகொண்டு நிகழ்வை துவக்கிவைத்தார். இப்பகுதியில் இதுவரை 800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக துளிகள் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.