வெள்ளக்கோவிலில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் மகளிருக்கான இலவசத் தையல் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
வெள்ளக்கோவில் சர் - பிட்டி தியாகராயர் தொழிலாளர் நலச் சங்கம், மகிழம் பொதுநல அறக்கட்டளை, குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் ஆகியவை இணைந்து நடத்தும் இப்பயிற்சி வகுப்பை மகிழம் அறக்கட்டளைப் பொதுச் செயலாளர் கே.ஜி.நட்ராஜ் தொடக்கிவைத்தார்.
வெள்ளக்கோவில் கிளை சிண்டிகேட் வங்கி மேலாளர் ஆண்டனி இருதய டியாக்ஸன் தலைமை வகித்தார். எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆர்.முருகன், சர் - பிட்டி தியாகராயர் தொழிலாளர் நலச் சங்கத் துணைத் தலைவர் டி.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பயிற்சி வகுப்பில் 60 பெண்கள் சேர்க்கப்பட்டனர். 90 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில் தையல், கட்டிங், டிசைனிங், சுடிதார், பிளவுஸ் தொழில் நுணுக்கங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில், தையல் ஆசிரியைகள் எஸ்.சத்யா, பி.தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.