கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்ய சிறப்பு முகாம் ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, திருப்பூர் தொழிலாளர் அலுவலர் த.முருகேசன் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கை:
தொழிலாளர் துறையின்கீழ் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 17 தொழிலாளர் நல வாரியங்களை அரசு அமைத்துள்ளது. அதில், கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுநர்கள் உள்பட பல்வேறு அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து, அவர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு போன்ற பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
தற்போது, கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுநர்கள் உள்பட பல்வேறு அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை நல வாரியங்களில் உறுப்பினர்களாகப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் பிரிவு மற்றும் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்புப் பதிவு முகாம் ஜனவரி 20-ஆம் தேதி தாராபுரம், கொண்டரசம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
எனவே, கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுநர் பணிபுரிவோர் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பதிவு விண்ணப்பம், 2 புகைப்படம், குடும்ப அட்டை, அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்ற குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதற்கான படிவம் ஆகியவற்றுடன் இம்முகாமுக்கு வந்து பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.