விளையாட்டு மைதானத்தில் மண் புழு உரக் கூடம் அமைக்க எதிர்ப்பு
சேவூர் அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சியில் விளையாட்டு மைய இடத்தில், மண் புழு உரக் கூடம் அமைக்க இளைஞர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சேவூர் அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சியில் விளையாட்டு மைய இடத்தில், மண் புழு உரக் கூடம் அமைக்க இளைஞர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் விளையாட்டு மையம் அமைக்கப்பட்டது. இதில், இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கால்பந்து, கையுந்து பந்து, உடற்பயிற்சி தடவாளப் பொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு, விளையாட்டு மையம் செயல்பாட்டு வந்தது.
இதன்படி, அவிநாசி ஒன்றியம், தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிப் பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம், ஊராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பு இல்லாததால், பயனற்றுப் போனது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் அருகில் உள்ள வேறு இடங்களுக்குச் சென்று விளையாடி வருகின்றனர்.
இதற்கிடையில் விளையாட்டு மைதான இடத்தில் மண் புழுத் தயாரிப்புக் கூடம் அமைப்பதற்காக கட்டுமானப் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், மண் புழுத் தயாரிப்புக் கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். மேலும் விளையாட்டு மையத்தை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினரிடம் கேட்டபோது, உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.