உப்புப்பாளையம் சுடுகாட்டில் தீ
வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சுடுகாட்டில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சுடுகாட்டில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
உப்புப்பாளைத்திலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு உள்ளது. இந்தச் சுடுகாட்டில் நிழல்கள் தன்னார்வ அறக்கட்டளை சார்பில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சுடுகாட்டு முள்புதர்களில் புதன்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த பல மரக்கன்றுகள் எரிந்து சேதமாகின. தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை.
வாகனம் பழுதால் வெள்ளக்கோவில் தீயணைப்பு வாகனம் உடனே செல்ல முடியவில்லை. இதனால் சுடுகாட்டுக்கு அருகிலுள்ள செட்டியார் காலனி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்து, வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சக வீரர்கள் மூலம் தீயை அணைத்தார்.