பனியன் தொழிலாளியை கொலை செய்தவர் கைது
பெருமாநல்லூர் அருகே பனியன் தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பெருமாநல்லூர் அருகே பனியன் தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர், நெருப்பெரிச்சல் குருவாயூரப்பன் நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மகன் கார்த்தி (27), பனியன் தொழிலாளி. இவருக்கு குடிப் பழக்கம் இருந்துள்ளது. கடந்த19ஆம் தேதி தனது நண்பர்களுடன் வீட்டுக்கு அருகில் உள்ள பாறைக்குழிப் பகுதிக்குச் சென்று மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கார்த்தி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் கார்த்தி மது குடிப்பதற்காக பாறைக் குழிப்பகுதிக்கு தனது நண்பர் நெருப்பெரிச்சல் குருவயூரப்பன் நகரைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் ராஜேந்திரன் (29) என்பவருடன் சென்றுள்ளார். அப்போது போதையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஏற்பட்ட தகராறில், ராஜேந்திரன் அருகில் கிடந்த பெரிய பாறைக்கல்லால் கார்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கார்த்தி உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பெருமாநல்லூர் போலீஸார் ராஜேந்திரனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.