லோக் அதாலத் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான ஆயத்தக் கூட்டம் திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் வரும் 14, 15 தேதிகளில் நடைபெறுகிறது.
மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வரும் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதில் தீர்வு காண உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு அவற்றை விரைந்து முடிப்பதற்கான ஆயத்தக் கூட்டத்தை நடத்துமாறு திருப்பூர் சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான அல்லி உத்தரவிட்டுள்ளார்.
இதன் பேரில், திருப்பூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்றம், விபத்து இழப்பீடுகள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான ஆயத்தக் கூட்டம், தலைமைக் குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
14-ஆம் தேதி, புதன்கிழமை மாலை 4.45 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், காவல் துறை அதிகாரிகளும், 15-ஆம் தேதி மாலை நடைபெறும் கூட்டத்தில் காப்பீடு நிறுவனங்களின் அதிகாரிகள், போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
இத்தகவலை, இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதியும், வழக்குகளை அடையாளம் காணும் பிரிவின் தலைவருமான ஏ.முஹமது ஜியாபுதீன் தெரிவித்துள்ளார்.