திருப்பூரில் நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
திருப்பூரில் 2 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி தூய்மைப் பணியாளர்கள் மண்டல அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் 2 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி தூய்மைப் பணியாளர்கள் மண்டல அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம்(சிஐடியூ) சார்பில் அனுப்பர்பாளையம், நல்லூர் உள்ளிட்ட மண்டல அலுவலகங்களில் துய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் செயலாளர் கே.ரங்கராஜ், தலைவர் பி.பழனிசாமி ஆகியோர் கூறியதாவது: திருப்பூர் மாநகாட்சியில் தினக்கூலி அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு குறைந்த அளவு ஊதியத்தாலும், முறையாக ஊதியம் வழங்காததாலும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாத ஊதியம் தற்போது வரையில் வழங்கப்படவில்லை, ஆகவே, நிலுவையில் உள்ள ஊதியங்களை வழங்கக்கோரி அனுப்பர்பாளையம், நல்லூர் மண்டல அலுவலகங்கள் மற்றும் கருவம்பாளையத்தில் உள்ள மாட்டுக் கொட்டகை பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் மாநகராட்சியில் பணியாற்றி வரும் 25-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.