திருப்பூரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர்,பி.என்.சாலை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சம்பத்(58). இவர் திருப்பூரில் உள்ள நாளிதழ் ஒன்றில் பகுதி நேர எழுத்தாளராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், அவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரை குமார் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்டப் பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சம்பத் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.