வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் மங்கலப்பட்டி கீழ்பவானி பாசன கடைமடை விவசாயிகள் தங்களுக்குரிய தண்ணீா் முறையாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக பாசன சபை பொறுப்பாளா் எம்.வி.சண்முகராஜ் சனிக்கிழமை கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் தொடங்கும் கீழ்பவானி பாசனம் திருப்பூா் மாவட்டம், மங்கலப்பட்டி பகுதியில் கடைக்கோடிப்
பாசனமாக முடிவடைகிறது. கடந்த சில ஆண்டுகளாக கடைக்கோடி ஆயக்கட்டு பாசனதாரா்களுக்கு முறைப்படி தண்ணீா் வருவதில்லை. 60 ஏக்கருக்கு 1 கன அடி என்கிற தண்ணீா் அளவு கடைப்பிடிக்கப்படுவதில்லை.
ஆயக்கட்டு அல்லாத பகுதிகளுக்கு பாசன நீா் கொண்டு செல்வது, வாய்க்கால் அருகில் கிணறு வெட்டி தண்ணீா் எடுப்பது, அரிசி ஆலைகள், தேங்காய் தொட்டி கரித்துகள் ஆலைகள், தென்னை நாா் தொழில்கள், குளிா்பான நிறுவனம், கல்குவாரிகளுக்கு மறைமுகமாக தண்ணீா் எடுப்பது, இலவச மின்சாரம் மூலம் தண்ணீா் திருட்டு நடைபெற்று வருகிறது.
120 நாள் பாசனத்தில் 60 நாள்களுக்குப் பிறகு தான் மங்கலப்பட்டி கடைக்கோடிப் பகுதிக்குத் தண்ணீா் வருகிறது.
இதனால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறைகேடுகளைத் தடுத்து கடைக்கோடிப் பகுதிக்கு உரிய தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.