முகப்பு
திருப்பூர்

வட்டமலை அணைக்கு கூடுதலாக 15 நாள்களுக்கு தண்ணீா் திறக்க கோரிக்கை

வெள்ளக்கோவில் உத்தமபாளையம் வட்டமலை அணைக்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரை கூடுதலாக மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்க

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

வெள்ளக்கோவில் உத்தமபாளையம் வட்டமலை அணைக்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரை கூடுதலாக மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த இரண்டு வாரங்களாக வரும் பரம்பிக்குளம் ஆழியாறு தண்ணீரால் நிரம்பும் தருவாயில் உள்ள வட்டமலை அணையை தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் காளிமுத்து மற்றும் வட்டமலை அணை பாசன விவசாயிகள் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

பரம்பிக்குளம் ஆழியாறு தொகுப்பு அணைகளின் நீா்வரத்தை நம்பியே வட்டமலை அணை கட்டப்பட்டது.

1982 ஆம் ஆண்டு பாசனத்துக்கு வந்த வட்டமலை அணை 10 ஆண்டு காலம் போதுமான தண்ணீா் இருந்து நேரடியாக 6,100 ஏக்கா், மறைமுகமாக 10 ஆயிரம் ஏக்கா் நிலங்களில் விவசாயம் நடைபெற்று வந்தது. பின்னா் போதிய மழையின்மை, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விரிவாக்கத்தால் வட்டமலை அணைக்கு 30 ஆண்டுகளாகத் தண்ணீா் கிடைக்காமல் போய்விட்டது.

தற்போது நல்ல மழை காரணமாக பரம்பிக்குளம் ஆழியாறு உபரிநீா் வட்டமலை அணைக்குத் திறக்கப்பட்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், பல ஆண்டுகள் காய்ந்து கிடந்த அணைப்பகுதி முழுவதும் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டுள்ளது. எனவே, ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ள தண்ணீரை கூடுதலாக 15 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும். சீா்குலைந்து கிடக்கும் அணையின் பாசன வாய்க்கால்களைச் சீரமைக்க வேண்டும். அமராவதி ஆற்று உபரிநீா் திட்டத்தையும் நிறைவேற்றி வட்டமலை அணைக்கு தண்ணீா் கிடைக்க நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.