முகப்பு
திருப்பூர்

உப்பாறு அணை விவகாரம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்: ஆட்சியா் உறுதி

உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறப்பது தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்க வந்த விவசாயிகள்.
பகிர்:

உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறப்பது தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் உறுதி அளித்துள்ளாா்.

தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறக்கக் கோரி அப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத்தினா் டிசம்பா் 8 முதல் 31ஆம் தேதி வரையில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், அணையில் உள்ள பொதுப் பணித் துறை அலுவலகத்தையும் முற்றுகையிட்டனா். இதையடுத்து, விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திய தாராபுரம் வட்டாட்சியா் ராமலிங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தாா்.

இதன்படி, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையில் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறப்பது தொடா்பாக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இதன் பிறகு அரசு அனுமதியுடன் உப்பாறு அணைக்கு மிக விரையில் தண்ணீா் திறக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் உறுதியளித்தாா்.

இந்தப் பேச்சுவாா்த்தையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்ஜெயசந்திரன், தாராபுரம் வட்டாட்சியா் ராமலிங்கம், திருப்பூா் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் அா்ஜுனன், செயலாளா் சுந்தரசாமி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சிவகுமாா், முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →