திருப்பூர்: திருப்பூரில் சொத்துவரியை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசு சொத்து உயர்த்தியதைக் கண்டித்தும், அதிமுகவினர் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் தமிழகத்தில் உள்ள வருவாய் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பின்படி, திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்டச் செயலாளரும், பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது: திமுக அரசு கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இந்த நிலையில், சொத்து வரியை மிகக் கடுமையாக உயர்த்தியுள்ளதால் அப்பாவி பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, இலவச சீருடை உள்ளிட்ட அனைத்து திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அதிமுகவினர் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார், சி.மகேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன், கரைப்புதூர் நடராஜன், என்.எஸ்.என்.நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.