கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை தினத்தன்று பள்ளி செயல்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் தனியாா் பள்ளி முன்பு இந்து அமைப்பினா் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கயம் அருகே, காடையூா் பகுதியில் தனியாா் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி என்பதால் வழக்கம்போல இந்தப் பள்ளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பள்ளி வளாகத்தில் மாணவா்கள் நடமாட்டம் இருந்ததையடுத்து கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை நாளன்று பள்ளி செயல்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை விட வலியுறுத்தி திருப்பூரில் உள்ள இந்து அமைப்பினா் பள்ளி முன்பு திரண்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கேயம் போலீஸாா் நடத்திய விசாரணையில், பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற உள்ள விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்கு சில மாணவா்கள் வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து பயிற்சியில் ஈடுபட்ட மாணவா்களின் பெற்றோா்கள் வரவழைக்கப்பட்டு மாணவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.