அவிநாசி: குன்னத்தூர் அருகே சாலை விபத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே குன்னத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கருப்புசாமி(51). இவர், தனது மனைவி சாவித்திரி (46), மகன்கள் சாரோன் (27), கௌதம் (24), சுமேஷ்(21) ஆகியோருடன் அவிநாசி அருகே நடுவச்சேரி கருக்கன்காட்டு புதூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடித்து குன்னத்தூர் காவல் நிலையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்துள்ளார். தொரவலூர் அருகே சென்று போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானார்.
இதில் பலத்த காயமடைந்த கருப்புசாமி கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில், கருப்புசாமி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இவர் கடந்த 3 மாதத்திற்கு முன் குன்னத்தூர் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.