அவிநாசி: அவிநாசி அருகே பெருமாநல்லூர் பிரதான பேருந்து நிறுத்தத்தில் மூடப்படாத குழியால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெருமாநல்லூர் நான்கு வழிச்சாலை சந்திப்பு, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, குன்னத்தூர், கோபி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்குச் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளிம்மன் கோயிலும், பெருமாநல்லூர் அருகே திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவும் உள்ளதால், அவ்வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் பேருந்து நிறுத்தம் அருகே தோண்டி மூடப்படாத நிலையில் உள்ள குழியால், மக்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
பேருந்துக்காக பயணிகள் காத்திருக்கும் இடத்தில், தனியார் நிறுவனத்தினர் கேஸ் குழாய் பதிக்கும் பணிக்காக 12 அடி ஆழத்தில் குழி தோண்டினர். இதில் இரவு நேரத்தில், குழாய் வழியே பவுடர் கலந்த நீரை கடந்த 10 நாள்களாக வெளியேற்றுவதால், அந்த இடம் முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. குறிப்பாக குழி முழுவதும் நீரால் நிரப்பியுள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இதையும் படிக்க: கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேர்: ஒருவர் மீட்பு
ஆகவே உடனடியாக குழியை மூடி பாதையை சரி செய்ய வேண்டும் என்றனர்.