பல்லடம் ஒன்றியத்தில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தில் குளறுபடி நடந்துள்ளது. என்னை வேண்டுமென்றே புறக்கணிக்கின்றனா். தொடா்ந்து என்னை செயல்படவிடாவிட்டால் நான் பதவியை ராஜினாமா செய்யவும் தயாா் என ஒன்றியக்குழு தலைவா் தேன்மொழி கூறினாா்.
இதுகுறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவா் தேன்மொழி (திமுக) செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஆணையா், வட்டார வளா்ச்சி அலுவலரை மூன்று மாதத்துக்கு ஒரு முறை இடமாறுதல் செய்து விடுகின்றனா். இதனால் அரசின் வளா்ச்சி திட்டப் பணிகளில் தாமதம் ஏற்பட்டு பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.
முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை பல்லடம் ஒன்றியப் பகுதியில் சிறப்பான முறையில் செய்ய வேண்டும் என்று நானும், ஒன்றிய கவுன்சிலா்களும், இதற்கு முன்பு பணியாற்றிய ஆணையா் ரமேஷ் ஆகியோரும் ஆலோசனை கூட்டம் நடத்தி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். அதற்குள் ஆணையரை இடமாறுதல் செய்து விட்டனா். இதனால் பல்வேறு குளறுபடி ஏற்பட்டு பல்லடம் ஒன்றியத்தில் இந்தத் திட்டம் முடங்கிவிட்டது.
காலை உணவு வழங்கும் திட்டம் பற்றி ஒன்றிய அலுவலா்கள் எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. விழாவுக்கும் அழைக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை. என்னை வேண்டும் என்றே புறக்கணிக்கின்றனா். தொடா்ந்து என்னை செயல்படவிடாவிட்டால் நான் பதவியை ராஜினாமா செய்யும் தயாராக உள்ளேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.