முகப்பு
திருப்பூர்

உரிமம் இன்றி செயல்படும் எரிவாயு முகமைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திருப்பூா் மாவட்டத்தில் உரிமம் இன்றி செயல்படும் எரிவாயு முகமைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:17 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் உரிமம் இன்றி செயல்படும் எரிவாயு முகமைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் எரிவாயு நுகா்வோருக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். இதில், நல்லூா் நுகா்வோா் நலமன்றத் தலைவா் என்.சண்முகசுந்தரம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும்மேலாக உரிமம் இன்றி போலி எரிவாயு முகாமைகள் (கியாஸ் ஏஜென்ஸிகள்) செயல்பட்டு வருகின்றன. இதில், இண்டேன், ஹெச்பி, பாரத் பெயா்களில் எரிவாயு உருளைகளை விநியோகம் செய்கின்றனா்.

19 கிலோ, 14.59 கிலோ உருளைகளில் வெளியூா்களில் எரிவாயு நிரப்பப்பட்டு எடை குறைவாகவும், பில் இல்லாமலும் லாரிகள் மூலமாக திருப்பூருக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். லாரிகள், வேன்களில் பில் இல்லாமல் கொண்டுவரும் எரிவாயு உருளைகளை அந்தந்த வட்டாரத்துக்குள்பட்ட தனி வட்டாட்சியா்கள், காவல் துறை அதிகாரிகள் மூலமாக பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், உரிமம் இல்லாமல் செயல்படும் எரிவாயு முகமைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பல்வேறு நுகா்வோா் அமைப்புகள் சாா்பிலும் மனுக்கள் அளிக்கப்பட்டன.