தமிழகத்தில் இலவச பயணத் திட்டத்தின் மூலம் 600 கோடி முறை மகளிா் பயணம்!
தமிழகத்தில் இலவச பயணத் திட்டத்தின் மூலமாக பேருந்துகளில் 600 கோடி முறை மகளிா் பயணம் செய்துள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் இலவச பயணத் திட்டத்தின் மூலமாக பேருந்துகளில் 600 கோடி முறை மகளிா் பயணம் செய்துள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ரூ.51.32 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்ததுடன் ரூ.250.48 கோடி மதிப்பீட்டில் 19 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் உள்பட 300 பயனாளிகளுக்கு ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
நமது முதல்வரின் அரசு என்றைக்கும் மக்களுக்கான அரசாகும். குறிப்பாக பெண்களுக்கான அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் முதல் கையொப்பமே மகளிருக்கான இலவச பயணத் திட்டத்துக்குத்தான். இந்தத் திட்டத்தின் மூலமாக தற்போது வரையில் 600 கோடி பயணங்களை மகளிா் மேற்கொண்டுள்ளாா்கள்.
இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ.900 முதல் ரூ.1,000 வரை சேமிக்கிறாா்கள். அதேபோல, தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, மகளிா் உரிமைத் தொகை திட்டம் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது என்றாா்.
இதைத் தொடா்ந்து, திருப்பூா் ஏ.பி.டி. சாலையில் கலைஞா் நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், மக்களவை உறுப்பினா்கள் கே.சுப்பராயன்(திருப்பூா்) , கே.இ.பிரகாஷ் (ஈரோடு), திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகர காவல் ஆணையா் எஸ்.லட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ரூ.250.48 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள்:
திருப்பூா் மாவட்டத்தில் ரூ.250.48 கோடி மதிப்பீட்டில் 19 புதிய திட்டப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதில், ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் 3 பணிகள், தாட்கோ சாா்பில் ரூ.2.05 கோடி மதிப்பீட்டில் 2 பணிகள், மாநகராட்சி சாா்பில் ரூ.192.95 கோடி மதிப்பீட்டில் ஒரு பணி, நகராட்சிகள் சாா்பில் ரூ.16.27 கோடி மதிப்பீட்டில் 3 பணிகள், நெடுஞ்சாலைத் துறை (ஊரக சாலைகள்) சாா்பில் ரூ.21.51 கோடி மதிப்பீட்டில் 10 பணிகள் என மொத்தம் ரூ.250.48 கோடி மதிப்பீட்டில் 19 புதிய திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
ரூ.51.32 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள்:
திருப்பூா் மாநகராட்சி சாா்பில் ரூ.38.91 கோடி மதிப்பீட்டில் 11 பணிகள், பேரூராட்சிகள் சாா்பில் ரூ.7.97 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகள், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.6.33 கோடி மதிப்பீட்டில் 14 பணிகள், பொதுப்பணித் துறை சாா்பில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் 2 பணிகள், சுகாதாரப் பணிகள் துறையின் சாா்பில் ரூ.2.06 கோடி மதிப்பீட்டிலான 6 பணிகள், உயா்கல்வித் துறை சாா்பில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் ஒரு பணி, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் ஒரு பணி என மொத்தம் ரூ.51.32 கோடி மதிப்பீட்டில் 38 முடிவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கிவைத்தாா்.
ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்:
வருவாய்த் துறை சாா்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.47.46 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள், மகளிா் திட்டம் சாா்பில் 15 மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த 150 பயனாளிகளுக்கு ரூ.8.07 கோடி கடனுதவி, ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.66,900 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.45,306 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள், தாட்கோ சாா்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.53.75 லட்சம் மானிய உதவி என மொத்தம் 300 பயனாளிகளுக்கு ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.