மாநகராட்சி சாலை ஆக்கிரமிப்பு: செப்டம்பா் 15-க்குள் அகற்ற முடிவு
திருப்பூா் மாநகராட்சி சாலையை மறித்து கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை வரும் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் அகற்ற மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகராட்சி சாலையை மறித்து கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை வரும் செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் அகற்ற மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகராட்சி, முதலாம் மண்டலத்துக்கு உள்பட்ட 24-ஆவது வாா்டு சாமுண்டிபுரம் - அன்னை காா்டனில் மாநகராட்சி சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு மனு அளித்திருந்தனா். இதே கோரிக்கையை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தந்தை பெரியாா் திராவிடா் கழகம் ஆகிய அமைப்புகளும் வலியுறுத்தின.
இதைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என நோட்டீஸ் ஒட்டினா்.
இந்த நிலையில், மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையா் கனகராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், காவல் உதவி ஆணையா் அனில்குமாா், 15 வேலம்பாளையம் காவல் ஆய்வாளா் தாமோதரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
அன்னை காா்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுவா்களை மாநகராட்சி சாா்பில் வரும் செப்டம்பா் 15- ஆம் தேதிக்குள் அகற்ற முடிவு செய்துள்ளதாக பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 15 வேலம்பாளையம் நகரச் செயலாளா் ச.நந்தகோபால் தெரிவித்துள்ளாா்.