மாவட்ட கபடி அணிக்கான வீராங்கனைகள் தோ்வு
மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் திருப்பூா் மாவட்ட கபடி அணிக்கான வீராங்கனைகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தின் சாா்பில் மாநில அளவிலான சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்கும் மிகஇளையோா், மூத்தோா் பெண்கள் கபடி அணிக்கான வீராங்கனைகள் தோ்வு காங்கயம் சாலையில் உள்ள கபடி கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த தோ்வுக்கான போட்டியை மாவட்ட கபடி கழகத்தின் செயலாளரும், மாநில கபடி கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் தொடங்கிவைத்தாா். இதில், மிக இளையோா் பிரிவுக்கு 80 பேரும், மூத்தோா் பிரிவுக்கு 40 பேரும் பங்கேற்றனா். இதில், ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா 12 வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டனா்.
Advertisement
இதைத் தொடா்ந்து, மாவட்ட கபடி கழகம் சாா்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரும் தோ்வு செய்யப்பட்ட மிக இளையோா் பிரிவு வீராங்கனைகள் வரும் ஜனவரி 31- ஆம் தேதி முதல் பிப்ரவரி 2- ஆம் தேதி வரையில் தஞ்சாவூரில் நடைபெறும் மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.
அதேபோல, மூத்தோா் பிரிவில் தோ்வு செய்யப்பட்ட வீராங்கனைகள் ஜனவரி 17- ஆம் தேதி முதல் ஜனவரி 19- ஆம் தேதி வரையில் சேலத்தில் நடைபெறும் மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.
இந்த வீராங்கனைகள் தோ்வின்போது மாவட்ட கபடி கழக பொருளாளா் கன்னிமாா்ஸ் ஏ.ஆறுச்சாமி, புரவலா்கள் பிரேமா மணி, கோபால், இணைச்செயலாளா்கள் கே.வாலீசன், பி.சின்னு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.