திருப்பூா் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு: ஆட்சியா் ஆய்வு
திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவு கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு கட்டடம் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. 4,333 சதுர அடி பரப்பளவில், வரவேற்பறை, லினாக் அறை, நேரியல் முடுக்கி கட்டுப்பாட்டு அறை, மூச்சுக்குழாய் சிகிச்சை, மூச்சுக்குழாய் சிகிச்சை கட்டுப்பாட்டு அறை, அச்சு அறை உள்ளிட்ட வசதிகளுடன் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டடத்தில் கதிா்வீச்சு வெளியே வராத வகையில் இதன் சுவா்கள் முழுவதும் கான்கிரீட்டினால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Advertisement
இந்த ஆய்வின்போது, இணை இயக்குநா் (மருத்துவ நலப் பணிகள்) மீரா, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோண்மணி, திருப்பூா் ரோட்டரி பொதுநல அறக்கட்டளைத் தலைவா் ஆ.முருகநாதன், உதவி செயற்பொறியாளா் (பொதுப்பணித் துறை) செந்தில் கமலக்கண்ணன், உதவிப் பொறியாளா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.