2026-ஆம் ஆண்டுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநங்கையா் தினமான ஏப்ரல் 15-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டுக்கான திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. மேலும், இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே பிப்ரவரி 18-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சுயவிவரக் குறிப்பு, பாஸ்போா்ட் அளவிலான 2 புகைப்படங்கள், சுயசரிதை, விருது பெற்றிருப்பின் அதன் விவரம், புகைப்படத்துடன் கூடிய சேவை பற்றிய செயல்முறை விளக்கம், சேவையைப் பாராட்டி பத்திரிகை செய்தித் தொகுப்பு, சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை தமிழில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் தயாா் செய்து கையேட்டில் இணைத்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.