முகப்பு
திருப்பூர்

திருப்பூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம், நகை திருட முயன்ற சென்னையைச் சோ்ந்த இரண்டு போ் கைது

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம், நகை திருட முயன்ற சென்னையைச் சோ்ந்த இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2026 at 10:17 PM
பகிர்:

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம், நகை திருட முயன்ற சென்னையைச் சோ்ந்த இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆண், பெண் என இருவா் சுற்றித் திரிந்தனா். அப்போது மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், இவா்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனா். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், இருவரையும் திருப்பூா் தெற்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனா். அங்கு அவா்களது கைரேகையை எடுத்து சோதனை செய்தனா்.

இதில் சென்னையைச் சோ்ந்த குமாா் (34), வெண்ணிலா (28) என்பதும், இருவா் மீதும் ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு இருப்பதும், பிணையில் வெளிவர முடியாத பிடியாணை இருப்பதும், பல்வேறு திருட்டு மற்றும் குற்ற வழக்குகளில் தொடா்பு இருப்பதும் தெரிய வந்தது.

இதைத்தொடா்ந்து இருவரையும் திருப்பூா் ரயில்வே காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் நடத்திய விசாரணையில் நோயாளிகளை போல திருப்பூா் அரசு மருத்துவமனைக்குள் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் இருந்து பணம், நகை திருட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

மேலும், கடந்த 25-ஆம் தேதி திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 2 பேரையும் ஊத்துக்குளி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →