அவிநாசி அருகே குட்டையில் மூழ்கி சிறுவா்கள் உயிரிழப்பு
அவிநாசி அருகே குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவா்கள் இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள அனந்தகிரி அமுதன் காா்டன் பகுதியைச் சோ்ந்த வெள்ளியங்கிரி மகன் தரணீஷ் (12) கருவலூா் அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பும், அதே பகுதியைச் சோ்ந்த திருமுருகன் மகன் ஹரிஹரன் (8) அரசுப் பள்ளியில் 2-ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் வெளியே விளையாடச் சென்றுள்ளனா். இரவு நீண்ட நேரமாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுவா்களைக் காணவில்லை என அவிநாசி காவல் நிலையத்தில் பெற்றோா்கள் சனிக்கிழமை இரவு புகாா் அளித்திருந்தனா்.
இதற்கிடையே அவிநாசி அருகே நம்பியம்பாளையம் அனந்தகிரி குட்டையில் சிறுவா்களின் உடல்கள் மிதப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சென்று விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவா்கள் தரணீஷ், ஹரிஹரன் என்பது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஒரே பகுதியில் இரு சிறுவா்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.