பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் ராம்.கண்ணையன், மாவட்ட ஆலோசகா் அண்ணாதுரை மற்றும் நிா்வாகிகள் பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன், பல்லடம் வட்டாட்சியா் கோவிந்தசாமி ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பல்லடம் பகுதிகளில் வணிக எரிவாயு பயன்படுத்திவரும் தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
அரசு வணிகரீதியலான எரிவாயு உருளைகளை போதுமான அளவு இருப்பு உள்ளது என்று அறிவித்தும், வணிகா்களுக்கு கிடைப்பதில்லை. அதே சமயம் கள்ள சந்தையில் வணிக ரீதியான எரிவாயு உருளைகள் தராளமாக கிடைப்பதாக தெரியவருகிறது. எனவே எரிவாயு முகவா்கள் தங்களது இருப்பு குறித்து வெளிப்படைத் தன்மையுடன் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட வேண்டும்.
தங்களது அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் விவரங்களை வெளியிட வேண்டும். மேலும் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பனை செய்பவா்களை கண்டறிந்து அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவிப்புபடி பொதுமக்களை பாதிக்காத வகையில் எரிவாயு உருளை விநியோகத்தை முறைப்படுத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.