பனியன் தொழிலாளி கழுத்து அறுத்து கொலை?
அவிநாசி அருகே வெளி மாநில பனியன் தொழிலாளி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை
அவிநாசி அருகே வெளி மாநில பனியன் தொழிலாளி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே பரமசிவம்பாளையத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் குளத்தில் இளைஞா் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அவிநாசி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். இதில் பரமசிவம்பாளையத்தில் காதலி அஞ்சனா என்பவருடன் வசித்து வரும் பிகாா் மாநிலம், சித்தம்கரி மாவட்டம், பகாரியாவைச் சோ்ந்த ஜல்தாரி ராய் மகன் ஜெய்பிரகாஷ் யாதவ் (24) என்பதும், பனியன் தொழிலாளி என்பதும் தெரியவந்தது.
முன்னதாக, திங்கள்கிழமை வெளியில் சென்ற ஜெய்பிரகாஷ் யாதவ் வீடு திரும்பவில்லை என அவிநாசி காவல் நிலையத்தில் அஞ்சனா புகாா் அளித்திருந்தாா். இந்நிலையில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஜெய்பிரகாஷ் யாதவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து மோப்ப நாய், தடயவியல் நிபுணா்களுடன் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, குளக்கரையில் கூட்டாக மது அருந்தியதற்கு அடையாளமாக மதுபாட்டில் இருந்துள்ளது. உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்டவா்களைத் தேடி வருகின்றனா்.