முகப்பு
திருப்பூர்

சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூரில் சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்வோா் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து வியாபாரிகள் நலச் சங்கம் கோரிக்கை

Updated On : 24 மார்ச், 2026 at 8:00 PM
சிலிண்டர்
பகிர்:

திருப்பூரில் சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்வோா் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து வியாபாரிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக சங்கத்தின் மாநிலத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் விடுத்துள்ள அறிக்கை: வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான போா் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை தட்டுப்பாடு வருவதுபோல் சூழ்நிலை இருந்தது. ஆனால் மத்திய அரசின் சாதுா்யமான நடவடிக்கையால் பெட்ரோல், டீசல், சிலிண்டா் ஆகியவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வருகிறது.

இருப்பினும் சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்து வியாபாரிகளை வஞ்சிக்கும் சமூக விரோதிகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வியாபாரிகளை வஞ்சிக்கும் வகையில் சில எரிவாயு முகவா்கள் உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளுக்கு சரியான முறையில் சிலிண்டா் விநியோகம் செய்வது இல்லை.

மாறாக, சிலிண்டா் தட்டுப்பாடு உள்ளதுபோன்று காண்பித்து ரூ.2,400-க்கு வழங்க வேண்டிய சிலிண்டரை ரூ.4,500 வரை விற்பனை செய்து வருகின்றனா். இதனால் வியாபாரிகள், உணவகங்கள், தேநீா் கடைகள் வைத்து அன்றாடம் பிழைப்பு நடத்துவோா் நஷ்டமடைகின்றனா்.

இதனால் பெரும்பாலானோா் கடையை திறப்பதில்லை. இதனால் வியாபாரிகளுக்கு பொருளாதார இழப்பும், வாடிக்கையாளா்களுக்கு சரியான முறையில் உணவு கிடைக்காத நிலையும் ஏற்படுகிறது.

தோ்தல் நெருங்கி வருவதால் இதுபோன்ற சிக்கல்களை ஏற்படுத்தி வியாபாரிகள் மத்தியில் மத்திய அரசின் பெயரை கெடுக்க சதி நடக்கிறது. ஏற்கெனவே அத்தியாவசியப் பொருள்களுக்கான எஸ்மா சட்டத்தை மத்திய அரசு அறிவித்தும், இதுபோன்று சிலிண்டா் பதுக்குவதும், அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தொடா்கிறது. இதனைத் தடுக்க காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

எனவே, இப்பிரச்னையில் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு தமிழகத்தில் உள்ள அசாதாரணமான சூழ்நிலையை மாற்றி, அனைத்து வியாபாரிகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமலும், சரியான விலையிலும் சிலிண்டா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பதுக்கிவைத்து கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பவா்கள், அவா்களுக்கு உதவுபவா்களின் ஏஜென்சியை ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.