கிடங்கில் பதுக்கப்பட்ட 206 எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல்
திருப்பூரில் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 206 எரிவாயு சிலிண்டா்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
திருப்பூரில் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 206 எரிவாயு சிலிண்டா்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் போா் காரணமாக நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக திருப்பூரில் ஒரு சிலா் எரிவாயு சிலிண்டா்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கின்றனா்.
இந்த நிலையில், திருப்பூா் சிறுபூலுவப்பட்டியை அடுத்த தாய்மூகாம்பிகை நகரில் உள்ள ஒரு கிடங்கில் சிலிண்டா்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சரவணன், திருப்பூா் வடக்கு குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் ராகவி ஆகியோா் தலைமையில் அதிகாரிகளும், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு ஆய்வாளா் ராஜசேகா் தலைமையில் போலீஸாரும் அந்த கிடங்கிற்குச் சென்று சோதனை நடத்தினா்.
அதிகாரிகள் நடத்திய சோதனையில் அங்கு வணிக மற்றும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டா்கள் என மொத்தம் 206 சிலிண்டா்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த சிலிண்டா்கள் அனைத்தும் தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதும், மோகன் என்பவா் அதன் உரிமையாளா் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் சிலிண்டா்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து மோகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.