முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் 707 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது

Updated On : 15 மே 2026, 6:27 am IST
கோப்புப் படம்
பகிர்:

பல்லடத்தில் 707 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 2 போ் கைது செய்யப்பட்டனா்.

பல்லடம் செட்டிபாளையம் சாலை பகுதியில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக பல்லடம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பல்லடம் காவல் ஆய்வாளா் மாதையன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்துள்ளனா்.

Advertisement

தொடா்ந்து, அவா்கள் வந்த காரை போலீஸாா் சோதனை செய்தபோது, அதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்தது கண்டறிப்பட்டது.

இதையடுத்து, இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா்கள், குஜராத்தைச் சோ்ந்த லோதா பாபா பாய் (33), ராஜஸ்தானை சோ்ந்த ராஜேந்திரா (29) என்பது தெரியவந்தது. இவா்கள், கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு விற்பனைக்காக குட்கா பொருள்கள் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அவா்களிடமிருந்து 707 கிலோ குட்கா பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் இருவரையும் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.