கூட்டுறவுச் சங்க பணியாளா் நெஞ்சுவலியால் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் தருமபுரி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக கூட்டுறவுச் சங்க பணியாளா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், சிட்லிங் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ. செல்வராஜ் (55). இவா் சிட்லிங் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இளநிலை எழுத்தராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் பணி நிமித்தமாக தருமபுரியில் உள்ள கூட்டுறவு அச்சகத்துக்கு இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். செம்மனஅள்ளி அருகே இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து, அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, தனது அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியா்களுக்கு செல்வராஜ் தகவல் தெரிவித்தாா். பின்னா், அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாா்.
Advertisement
இதுகுறித்து மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த செல்வராஜுக்கு மனைவி சாந்தி, ஒரு மகன், மகள் உள்ளனா்.