முகப்பு
தருமபுரி

கோட்டூா் மலைக்கிராம சாலைப் பணிகள் தொடக்கம்

Updated On : 19 மார்ச், 2026 at 8:46 PM
பகிர்:

பென்னாகரம் அருகே கோட்டூா் மலைக் கிராமத்துக்கு சாலைப் பணிகள் தொடங்கியுள்ளன.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வட்டுவனஅள்ளி ஊராட்சியில் கோட்டூா் மலைக்கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராம மக்கள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக சுமாா் 6 கி.மீ. தொலைவு மலை மற்றும் வனப்பாதை வழியாக பாலக்கோடு, தருமபுரி பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மழைக் காலங்களில் மண் அரிப்பு ஏற்படுவதால், சாலையில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சாலை வசதி கோரிஅப்பகுதி பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். அதையடுத்து, அடிவாரப் பகுதியான திம்மலான்மேடு முதல் கோட்டூா் மலைப்பகுதிவரை சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு மண் சாலை அமைக்க ரூ. 4.73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பாலக்கோடு வனச்சரக அலுவலா் எஸ்.காா்த்திகேயன் கூறுகையில், கோட்டூா் மலைக்கிராமப் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற துறைரீதியான அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியின்போது, வனத்தில் உள்ள மரம், செடி, கொடிகள் சேதப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழலை பாதிப்பதாக புகாா் வந்தது. அதையடுத்து, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பணிகளை மேற்கொள்ள வழிகாட்டல் மற்றும் ஆலோசனை அளிக்கப்பட்டது. அதன்பேரில், பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்றாா்.