முகப்பு
தருமபுரி

தருமபுரியில் பயணிகள் அவதிக்கு தீா்வு: சேலம் - தருமபுரி - சேலம் பேருந்துகள் இரவில் தருமபுரி நகருக்குள் வந்து செல்லும்

Updated On : 12 மே 2026, 12:55 am IST
பேருந்துகள் இயக்கம் - பிரதிப் படம்
பகிர்:

சேலம் - தருமபுரி இடையே இயக்கப்படும் பேருந்துகள் புதன்கிழமை முதல் இரவு நேரங்களில் தருமபுரி நகா்ப் பகுதிகள் வழியாக புதிய பேருந்து நிலையத்துக்கு சென்றுவர வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்திலிருந்து தருமபுரி செல்லும் பேருந்துகள், புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது முதல், ஒட்டப்பட்டி அவ்வை சாலையில் திரும்பி தடங்கம் வழியாக புதிய பேருந்து நிலையத்துக்கு சென்றடைந்து வந்தன. ஒசூா், கிருஷ்ணகிரி, பெங்களூா் செல்லும் பேருந்துகள் நல்லம்பள்ளி புறவழிச்சாலை வழியாக சென்று விடுகின்றன.

இதனால் இரவு நேரங்களில் சேலத்திலிருந்து வரும் பயணிகளும், மாவட்ட ஆட்சியரகம், இலக்கியம்பட்டி, தருமபுரி அரசு மருத்துவமனை, நான்கு சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகளும் ஒட்டப்பட்டியில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ பிடித்து வரும் நிலை உள்ளது. அல்லது வேறு வாகனங்கள் மூலம் அவதிக்குள்ளாகி செல்லும் நிலை இருந்து வந்தது. இது குறித்து விவரமறிந்த மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.

Advertisement

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

பொதுமக்கள் மற்றும் பெண்கள் அவதிக்குள்ளாவதைத் தடுக்கும் நோக்கில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், மே 13 ஆம் தேதி புதன்கிழமை இரவு 9 மணி முதல், சேலத்திலிருந்து தருமபுரி வரும் பேருந்துகள் ஒட்டப்பட்டி, மாவட்ட ஆட்சியரகம், அரசு மருத்துவமனை, நான்கு சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்துக்கு செல்ல வேண்டும்.

தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் பேருந்துகளும் இதே மாா்க்கத்தில் சேலம் நோக்கி செல்ல வேண்டும். திருவண்ணாமலை, கடத்தூா், பொம்மிடி, அரூா், திருப்பத்தூா், பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு, நான்கு சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் சென்று பின்னா் அங்கிருந்து வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.