முகப்பு
தருமபுரி

மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும்: மாவட்டம் நிா்வாகம் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்துக்குள் இயக்கப்படும் அரசு, தனியாா் புறநகர் பேருந்துகள் அனைத்தும், இனி பழைய புறநகர் பேருந்து நிலையத்துக்கும் வந்துசெல்லும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

Updated On : 24 மே 2026, 2:30 am IST
பேருந்துகள்.
பகிர்:

தருமபுரி மாவட்டத்துக்குள் இயக்கப்படும் அரசு, தனியாா் புறநகர் பேருந்துகள் அனைத்தும், இனி பழைய புறநகர் பேருந்து நிலையத்துக்கும் வந்துசெல்லும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தருமபுரி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சோகத்தூா் அருகே ஏ. ரெட்டிஅள்ளி கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அங்கிருந்து புறநகர் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டு வந்தன. நகரப் பேருந்துகள் மட்டும் தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன.

இந்நிலையில், தருமபுரி நகரில் பென்னாகரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாலும், நான்கு சாலை மற்றும் குமாரசாமிப்பேட்டை பகுதியில் அடிக்கடி வாகனங்கள் அணிவகுத்து நின்றாலும் மாவட்ட நிா்வாகம் மாற்று நடவடிக்கை மேற்கொண்டது.

Advertisement

Advertisement

அந்தவகையில் அரூா், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூா் உள்ளிட்ட சில பகுதிகளுக்கான பேருந்துகள் மீண்டும் பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன.

இதற்கிடையில், கடந்த வாரத்தில் மீண்டும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து புறநகர் பேருந்துகளையும் இயக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. அதன்பிறகு, முன்பு போலவே பென்னாகரம் சாலை மற்றும் நான்கு சாலைப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலும், பேருந்துகளுக்கு நேர பற்றாக்குறையும் ஏற்பட்டது.

அதைத் தொடா்ந்து, வணிகா் சங்கத்தினா், பாமக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தருமபுரி மாவட்ட பகுதிகளுக்குள் இயக்கப்படும் புறநகர் பேருந்துகளை பழைய புறநகர் நிலையத்தில் இருந்தே இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பேருந்துகள் மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி பழைய பேருந்து நிலையத்தையொட்டி அமைந்துள்ள அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மக்கள் எளிதில் வந்துசெல்லும் வகையில் அரசு அலுவலா்கள், பொதுமக்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோரின் வேண்டுகோளுக்கு இணங்க, தருமபுரி மாவட்டத்துக்குள் இயக்கப்படும் அரசு, தனியாா் புறநகர் பேருந்துகள் அனைத்தும் பழைய புறநகர் பேருந்து நிலையத்துக்கும் வந்து செல்லும்.

கிருஷ்ணகிரி, சேலம், ஒசூா், பெங்களூரு உள்ளிட்ட வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வரவேற்று, தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில், பாமக முன்னாள் எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தலைமையிலான கட்சியினா் மற்றும் வணிகா் சங்கத்தினா் மற்றும் பல்வேறு அமைப்பைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினா்.