கிருஷ்ணகிரியில் பயன்பாட்டுக்கு வராத புதிய மாவட்ட மைய நூலகம்
கிருஷ்ணகிரி, பிப். 16: கணினிமயமாக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகம் திறப்பு விழா நடத்தப்பட்டு 2 மாதங்களாகியும் இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் பொது
கிருஷ்ணகிரி, பிப். 16: கணினிமயமாக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகம் திறப்பு விழா நடத்தப்பட்டு
2 மாதங்களாகியும் இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் பொது அறிவை மேம்படுத்தவும், அவர்கள் போட்டித் தேர்வில் பங்கேற்று வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் ரூ.70 லட்சம் மதிப்பில் கணினி மயமாக்கப்பட்ட நூலகம் கட்டப்பட்டுள்ளது.
Advertisement
பொது நூலகத் துறையால் இந்த நூலகக் கட்டடத்துக்கு கடந்த 16.12.09-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டடப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், கடந்த ஆண்டு ஒசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இந்த கணினிமயமாக்கப்பட்ட மாவட்ட மைய நூலகத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இந்த நூலகக் கட்டடத்தில் சுற்றுச்சுவர், நடைப்பாதைக்கான தரை மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாய்வுதள பாதைக்கான கைப்பிடி போன்ற பணிகள் நிறைவடையாத நிலையில் உள்ளன.கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தந்த சட்டமன்ற மதிப்பீட்டு குழு, உள்ளாட்சி அமைப்புகள் மாவட்ட நூலகத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.1 கோடி வரிபாக்கியை உடனே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதுகுறித்து ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நூலக வரியை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தியதாக தெரியவில்லை. இதனால் புதிய கணினி நூலகத்துக்கான தடவாளப் பொருட்கள் வாங்க இயலாத நிலையில் மாவட்ட மைய நூலகம் உள்ளது.
இந்த புதிய கணினி மயமாக்கப்பட்ட மாவட்ட மைய நூலகத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பதே இங்குள்ள இளைஞர்களின் விருப்பமாக உள்ளது.