திருமண மண்டபத்தில் நகை திருடிய வழக்கில் சேலத்தைச் சேர்ந்த 2 பேரை தருமபுரி நகர போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரி விஜயராகவனின் மனைவி மஞ்சுளா. இவர், கடந்த 2016, மார்ச் 6-ஆம் தேதி தருமபுரி அருகே பாரதிபுரம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது, மஞ்சுளா வைத்திருந்த தங்கம், வைர நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து தருமபுரி நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் த.காந்தி தலைமையில் மூன்று தனிப் படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், சேலம் சீலநாய்க்கன்பட்டி அருகே தலைமலை நகரைச் சேர்ந்த பி.மணி(62), ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்(67) ஆகிய இருவரும் மஞ்சுளாவிடமிருந்து நகைகளைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களைக் கைது செய்த போலீஸார், சுமார் 10 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகளைப் பறிமுதல் செய்தனர்.