தமிழ்நாட்டின் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லில் சூழல் சுற்றுலாவுக்கான இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தின் மூலம் ஒகேனக்கல் குறித்த அனைத்துத் தகவல்களையும் படங்களுடன் பார்க்க முடியும் என்பதுடன், சுற்றுலா செல்வோர் இங்கு தங்குவதற்கான வனத்துறை விடுதிகளையும் பணம் செலுத்தி முன்பதிவு செய்ய முடியும்.
மேலும் இங்குள்ள சூழல்நேயக் கடைகளின் விற்பனை பொருள்களையும் இணையதளம் மூலமாகவே பணத்தைச் செலுத்தி வீட்டுக்கே வரவழைக்கலாம். காவிரியாறு தமிழ்நாட்டில் முழுமையாக நுழையும் இடம் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒகேனக்கல்.
தென்னிந்தியாவின் நயாகரா என்றழைக்கப்படும் அளவுக்கு அருவி, அலாதியான பரிசல் பயணம், சுவையான மீன் உணவு, முதலைப் பண்ணை, மீன் காட்சியகம் என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்கள் நிறைந்தது ஒகேனக்கல்.
தமிழ்நாட்டு பயணிகள் மட்டுமல்லாது, கர்நாடகம், ஆந்திரம், கேரள மாநிலப் பயணிகளும் ஒகேனக்கல் வந்து செல்கின்றனர். எனவே, சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அதுவும் சூழல்நேய சுற்றுலாக்களை வடிவமைக்கும் வகையிலும் தற்போது பிரத்யேக இணையதளத்தை வடிவமைத்துள்ளது தருமபுரி மாவட்ட வனத்துறை. http://www.hogenakkalecotourism.com என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அத்தனை தகவல்களும் படத்துடன் உள்ளன.
அத்துடன், ஒகேனக்கல்லில் தங்குவதற்கான வனத்துறை விடுதிகளை இணையதளம் மூலமாகவே பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒகேனக்கல்லில் வனத்துறை மூலம் நடத்தப்படும் சூழல்நேயக் கடைகளில் (eco shops) கிடைக்கும் மூலிகைப் பொருள்கள், பாரம்பரிய உணவுப் பொருட்கள், கலைப் பொருட்கள் போன்றவற்றையும் இணையதளம் மூலமாகவே பணம் செலுத்தி வீட்டுக்கே வரவழைத்துப் பெற்றுக் கொள்ளலாம்.
"ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தின் மேம்பாட்டில் இதுவோர் அடுத்த கட்ட முயற்சி' என்கிறார் மாவட்ட வன அலுவலர் க. திருமால். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: இணையதளம் மூலமான பயன்பாடு அதிகரிக்கும்போது, சூழல்நேயக் கடைகளில் இன்னும் கூடுதலான பொருள்களை விற்பனைக்கு வைக்கவும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும், சில குறிப்பிட்ட காலங்களில் மட்டும் பாதுகாப்பான டிரெக்கிங் பயணத்தையும் ஒழுங்குபடுத்தி வழங்கவும் திட்டமிட்டு வருகிறோம். பயணிகளின் தேவைக்கேற்ப முன்கூட்டியே சொல்வோருக்கு உணவு ஏற்பாடுகளும் செய்துத் தரப்படும்.
வழக்கமான சுற்றுலாவைக் காட்டிலும், காட்டுக்கும், மலைக்கும் வரும்போது பயணிகள் எவ்வாறான மனநிலையுடன் வர வேண்டும், என்ன பொருட்களையெல்லாம் காடுகளுக்குள் வீசக்கூடாது என்பதையும் விளக்கும் வகையிலான தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளோம். இதுதான் எங்களின் பிரதான நோக்கம் என்கிறார் திருமால்.
தருமபுரி வனத்துக்கே பிரதானமான யானைகளைப் பற்றிய குறிப்பேடும், முதலைகளைப் பற்றிய குறிப்பேடும் இந்த இணையதளத்தில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஒகேனக்கல்லுக்கு அருகிலுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யூர் வனப்பகுதியில் சூழல் சுற்றுலா செல்வதற்கான தகவல்களும் இத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.