ஜக்கசமுத்திரத்தில் 30 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 2.05 கோடி கடனுதவி
பாலக்கோடு வட்டம், ஜக்கசமுத்திரத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் 30 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2.05 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாநில உயர் கல்வித்
பாலக்கோடு வட்டம், ஜக்கசமுத்திரத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் 30 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2.05 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார். கடனுதவிகளை வழங்கி அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியது:
நிகழாண்டில் கூட்டுறவுத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் ரூ. 7 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பயிர்க்கடன் வழங்க ரூ. 124 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரை 27,716 விவசாயிகளுக்கு ரூ. 134 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. ஜக்கசமுத்திரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 1.35 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை ரூ. 1.10 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் 4 சதவீத வட்டியில் கடன் வழங்க ரூ. 8.50 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை ரூ. 9.39 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
விழாவில் பாலக்கோடு சர்க்கரை ஆலையின் தலைவர் கே.வி. அரங்கநாதன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் பொன்னுவேல், கூட்டுறவு துணைப் பதிவாளர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமஜெயம், ஜக்க சமுத்திரம் கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவர் கோவிந்தசாமி, செயலர் மாதேஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.