பிரதமருடன் காணொலி மூலம் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்ட மின் ஆளுமைத் திட்டப் பயனாளிகள் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் மூலம் அரசு சேவைகள் பெற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பயனாளிகளிடம் வெள்ளிக்கிழமை காணொலியில் கலந்துரையாடினார்.
தருமபுரி மாவட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இப் பொது சேவை மையங்கள் மூலம் தமிழக அரசின் ஆன்லைன் சேவைகள் மற்றும் டிஜிட்டல் கல்வி போன்ற எண்ணற்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சேவை மையத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகள் தருமபுரி தேசிய தகவலியல் மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதில், மாவட்ட மின் ஆளுமைத் திட்ட மேலாளர்கள் சதீசன், பூங்கோதை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாதவன் மற்றும் இருமத்தூர், பாகலஹள்ளி, திப்பம்பட்டி கிராம பயனாளர்களும் கலந்து கொண்டனர்.