தருமபுரியில் 9ஆம் வகுப்பே படித்து நகைத் தொழில் செய்து வரும் இளைஞர் தன்னுடைய பிரத்யேக ஆர்வத்தின் காரணமாக மகாராஷ்டிரத்தில் இருந்து மாதுளைக் கன்றுகளை வாங்கி வந்து நட்டு சாகுபடி செய்து வருகிறார். அவரது ஆர்வத்துக்கு "யு-டியூப்' காட்சிகளே தொழில்நுட்ப வகுப்பறைகளாக இருந்துள்ளன.
மாதுளம் பழம் உடலின் ரத்த அணுக்களைப் பெருமளவு பெருக்குவதில் வல்லமை கொண்ட பழம். பெரும்பாலும் வெளிமாநிலங்களில் இருந்துதான் தமிழ்நாட்டுக்கு வருகிறது.
ஏதாவதொரு சாகுபடிக்கு மட்டுமே பெயர் போன மற்ற மாவட்டங்களைப் போல் அல்லாமல் தருமபுரி மாவட்டம் எல்லா வகையான தானிய வகைகள், பழங்கள், காய்கறிகளையும் விளைவிக்கும் அரிய மாவட்டம். இங்கே வறட்சியைத் தாங்கி வளரும் பேரீச்சையும் உண்டு, எப்போதும் தண்ணீரே பிரதானம் என்ற நிலையிலுள்ள கேரட் சாகுபடியும் உண்டு.
கேழ்வரகு, சாமை போன்ற வறட்சிப் பயிர்கள் தருமபுரி மாவட்டத்தில் அதிகம். அதேநேரத்தில் பென்னாகரம் பகுதியில் திராட்சைப் பழ சாகுபடியும் நடைபெறுகிறது. இந்த வரிசையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாதுளம் பழம் சாகுபடி செய்து வருகிறார் 32 வயதான இளைஞர் கே. அழகுமணி. தருமபுரி மாவட்டம் வெள்ளோலை பகுதியைச் சேர்ந்த இவர் அடிப்படையில் நகை வியாபாரி.
9ஆம் வகுப்பு மட்டுமே முடித்திருக்கும் அழகுமணி நகைத் தொழில் நிமித்தம் அடிக்கடி மகாராஷ்டிர மாநிலத்துக்குச் சென்றுவருவது வழக்கம். அங்கே மாதுளை விளைவதைக் கண்ட இவர், இணையதளத்தில் யு-டியூப் மூலம் மாதுளை சாகுபடி பற்றித் தேடிப் பார்த்திருக்கிறார்.
அதன்பிறகு அங்கிருந்து சுமார் 350 மாதுளைக் கன்றுகளை வாங்கி வந்து தன்னுடைய நிலத்தில் வெறும் 80 சென்ட் பகுதிக்கு மட்டும் மாதுளை பயிரிடுட்டுள்ளார். முதல் ஆண்டு முதலே மாதுளை விளைச்சல் அமோகமாக இருக்கிறது. முழுமையான கவனம் செலுத்தி மாதுளை சாகுபடியைச் செய்தால் ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் கூட வருமானம் ஈட்டலாம் என்கிறார் அழகுமணி.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதங்களில் பூ வைக்கத் தொடங்கும். மே, ஜூன் மாதங்களில் அறுவடை நடைபெறும். நான் பயிரிட்டுள்ளது பகுவா என்ற ரகம். இப்போதைக்கு ஆண்டுக்கு சராசரியாக 5 டன் விளைகிறது. சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களே நேரடியாக வாங்கிச் செல்கின்றனர்.
அறுவடைக்குப் பிறகு மாதுளை மரத்தை மொட்டையடித்து விடுகிறோம். தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு இயற்கை உரங்களைக் கொண்டு ஊட்டம் கொடுத்து சீராக தண்ணீர் விட வேண்டும்.
முழுமையாக இதில் கவனம் செலுத்தினால் நல்ல விளைச்சல் கிடைக்கும். ஒரு முறை எடுத்து வரும் கன்றுகள் வளர்ந்து தொடர்ந்தது 15 ஆண்டுகளுக்கு விளைச்சல் கொடுக்கும் என்கிறார் அழகுமணி.
விவசாயத்தில் ஆர்வம் கொண்டுள்ள இளைஞர்கள் வருமானம் ஈட்டும் இதுபோன்ற அரிய வகைகளை வைத்து நல்ல பலனைப் பெறலாம். தோட்டக்கலைத் துறையும் கைகொடுத்து உதவினால் விவசாயம் லாபகரமான தொழில்தான் என்பதை மெய்ப்பிக்கலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.