அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், 2016 - 17 -ஆம் ஆண்டில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து, அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் ஓரிரு தினங்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலன தினங்கள் பூட்டியே இருப்பதாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் பாதுகாப்பான குடிநீரின்றி நோயாளிகள் அவதியுறுகின்றனர். எனவே, அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை நாள்தோறும் வழங்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.