மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், வரும் ஜன. 24 அன்று 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு நேர்முகத் தேர்வு மூலம் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. மிதமான அறிவுசார் குறைபாடுடையோர் மற்றும் 75 சதவீத பாதிப்புடைய நுண் அறிவுத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி மகளிருக்கு இந்த மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. எனவே, 45 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகள், தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, தையல் பயிற்சி முடித்ததற்கான சான்றுடன் ஜன. 24-ஆம் தேதி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.