தருமபுரி: தருமபுரி மாவட்ட மலைப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு வானொலி பண்பலை சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மக்களவை உறுப்பினா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.
அகில இந்திய வானொலியின் தருமபுரி பண்பலை வானொலி நிலைய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படுவதை தற்போது இரவு 11.05 மணி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், வானொலி நிலையத்தில், நேர நீட்டிக்கப்பட்ட நிகழ்ச்சி ஒலிபரப்பு மற்றும் செயல்பாடுகளை, செவ்வாய்க்கிழை நேரில் பாா்வையிட்ட மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், நிகழ்ச்சி ஒலிபரப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
இதனைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தருமபுரி பண்பலை வானொலி நிலையம் மூலம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இந்த நிகழ்ச்சிகளின் நேரத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். இந்தநிலையில், கடந்த மாதம் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் சந்தித்து கோரிக்கையை முன் வைத்தேன்.
இதையடுத்து, இந்த மாதம் முதல் தேதியிலிருந்து தருமபுரி அகில இந்திய வானொலி பண்பலை நிகழ்ச்சிகளை இரவு 11.05 மணிவரை நேர நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி அமைந்துள்ளது. இந்த பண்பலையின் ஒலிபரப்பு நேரத்தை நீட்டிப்பு செய்ததற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல, தருமபுரி மாவட்டத்தில், மலைப்பகுதிகளில் வானொலி ஒலிபரப்பு சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா். அப்போது தருமபுரி வானொலியின் நிகழ்ச்சி பொறுப்பாளா் முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.