அரூரை அடுத்த கலசப்பாடி அரசு பழங்குடியினர் நல உயர்நிலைப் பள்ளியில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பழங்குடியினர் விடுதலை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அரூரில் தருமபுரி மாவட்ட பழங்குடியினர் நலத்துறை திட்ட அலுவலர் தி.சரவணனிடம், பழங்குடியினர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ரஜினி, துணை அமைப்பாளர் சுதாகர் ஆகியோர் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சி கலசப்பாடியில் அரசு மலைவாழ் பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 175 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
தற்போது இப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், பழங்குடியின மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கிறது. ஆனால், பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறும் அரசுப் பள்ளியில், 25-க்கும் குறைவான எண்ணிக்கை உள்ள மாணவர்களுக்கு 5 ஆசிரியர்கள் உள்ளனர். எனவே, கலசப்பாடி மலைவாழ் பழங்குடியினர் நல அரசு உயர்நிலைப் பள்ளிக்குத் தேவையான ஆசிரியர்களை விரைந்து பணியில் அமர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.