காவலர் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பு
தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் உயிரிழந்த உதவி காவல் ஆய்வாளர், காவலர் ஆகியோர் குடும்பத்தினருக்கு சனிக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் உயிரிழந்த உதவி காவல் ஆய்வாளர், காவலர் ஆகியோர் குடும்பத்தினருக்கு சனிக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்த இளையராஜா என்பவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் உயிரிழந்தார். இதேபோல், கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் ராஜேஷ்கண்ணா மொரப்பூர் அருகே வாகன விபத்தில் அண்மையில் உயிரிழந்தார்.
இதையடுத்து, தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினர் வழங்கிய நிதியில் இருந்து உதவி காவல் ஆய்வாளர் இளையராஜா மனைவி நித்யா, காவலர் ராஜேஷ்கண்ணா மனைவி வித்யா ஆகியோரது குடும்பத்தினரிடம் தலா ரூ. 2 லட்சம் நிதியினை சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரதீப் குமார் (படம்) வழங்கினார். இதில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் உடனிருந்தார்.