காவிரி நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 10 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
தமிழகத்தின் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி, ராசிமணல், மொசல் மடுவு, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழையளவு குறைந்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.
திங்கள்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 13 ஆயிரம் கன அடியாக குறைந்து போனது. மாலை 6 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு மேலும் குறைந்து நொடிக்கு 10 ஆயிரம் கனஅடி மட்டுமே வந்து கொண்டிருந்தது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்த போதிலும், ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐவா் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் கொட்டுகிறது. நீா்வரத்து அதிகரிப்பின் போது மூழ்கியிருந்த பாறைத் திட்டுக்கள் அனைத்தும் தற்போது வெளியே தெரிகின்றன.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவானது கடந்த சில நாட்களாக அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால், நீா்வரத்தினை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.