அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் முழு ஊரடங்கால் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூா், கம்பைநல்லூா், கடத்தூா், பொம்மிடி உள்ளிட்ட நகா்ப் பகுதிகளில் அனைத்து வணிக நிறுவனங்களும் கடைகளும் மூடப்பட்டிருந்தன. மருத்துவமனைகள், மருந்தகங்கள், உணவகங்கள், பால் விநியோகம், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்பட அத்தியாவசியப் பணிகளுக்கான நிறுவனங்கள், கடைகள் மட்டுமே இயங்கின. முழு ஊரடங்கு காரணமாக அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்டது.
அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது வெளியே சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினா் அபராதம் விதித்தனா்.