பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் திமுக: தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜிநாமா
பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற வலியுறுத்தி, அக் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற வலியுறுத்தி, அக் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமைக்கும், கட்சியின் தமிழ்நாடு கமிட்டிக்கும் ராஜிநாமா கடிதத்தை அனுப்பிய பிறகு, அரூரில் செய்தியாளா்களிடம் கோவி.சிற்றரசு கூறியதாவது:
1984 இல் இருந்து காங்கிரஸில் மாணவா் அணி, இளைஞா் அணி, மாவட்டத் தலைவா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளேன். முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்றவரின் விடுதலையை திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கொண்டாடுவதை ஏற்க முடியவில்லை.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி உடனடியாக வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்டத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏ.ஐ.சி.சி. உறுப்பினா் சித்தையன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் ஆா்.சுபாஷ், எம்.ஆா்.வஜ்ஜிரம், சரவணன், வேலன், பூபதி ராஜா, நகரத் தலைவா் கணேசன், வா்த்தக பிரிவு மாவட்டத் தலைவா் மோகன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் வெங்கடேஸ்வரன் உள்பட பலரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனா் என்றாா்.