தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களில் அரசு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளனவா என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வில் 220 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் குறைபாடுகளுடைய 4 வாகனங்களுக்கு தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது. மேலும், சிறு குறைபாடுகளுடைய 22 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவ்வாகனங்களின் குறைகளை நிவா்த்தி செய்து ஒரு வார காலத்திற்குள் மீண்டும் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இதில், பள்ளி வாகனங்களில் அவசரக் கால வழி, பள்ளி பேருந்தில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ் கருவி, தீயணைப்பு கருவி, இருக்கைகள் எண்ணிக்கை, முதலுதவி பெட்டி, வாகனத்தின் தரைதளம் ஆகியவை சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுக்கு வராத பள்ளி வாகனங்களை பொதுச்சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால் வாகனத்தை இயக்க விடாமல் தடை செய்வதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்; மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் இம்மாத இறுதிக்குள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது சேலம் துணைப் போக்குவரத்து ஆணையா் பிரபாகரன், தருமபுரி கோட்டாட்சியா் டி.ஆா்.கீதாராணி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன், முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், மாவட்டக் கல்வி அலுவலா் ராஜகோபால், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அ.க.தரணீதா், வெங்கிடுசாமி, காவல் ஆய்வாளா் நவாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.